தென்றல் வந்து என்னை தொடும்
பரிமளா ராஜேந்திரன்
* Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.
Belletristik/Erzählende Literatur
Beschreibung
குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.
சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.
“சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா”
‘‘வாங்க, உட்காருங்க”
“இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’
“இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்”
உள்ளே செல்ல,
“பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்”
“ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.”
உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.
ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான நாசியுமாக பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள்.
“வாங்கம்மா.”
தன்னை நோக்கி வரும் வித்யாவை, ஒருவித பொறாமையுடன் பார்த்தாள். “வாம்மா, நல்ல லட்சணமா சினிமா நடிகை மாதிரி இருக்கே. படிப்பை முடிச்சிட்டியோ”என்ன இவள் வயசுக்கு தகுந்த மாதிரி பேசாமல், முதன் முதல் அறிமுகமாகுபவரிடம், எப்படி பேசுவது என்ற நாகரிகம் கூட தெரியாமல், முதல் பார்வையிலேயே அவளை பிடிக்காமல் போக,
“ம்... முடிச்சிட்டேன்மா “
அதற்குள் செளந்தர்யா, சீனி டம்ளருடன் வர, “என்ன சவுந்தரியாம்மா. உங்க மகள் அளந்துதான் பேசுவா போலிருக்கு... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றா.”
“அது ஒண்ணுமில்லை. உங்ககிட்டே இன்னும் பழகலை. அதான் தயங்கறா”
“இதிலென்ன தயக்கம். வயசுப்பையனா எதிரில் உட்கார்ந்திருக்கான் தயங்கறதுக்கு. இந்த காலத்தில் பொம்பளை புள்ளைங்க, இப்படித்தான்... பாதி நடிப்பு, ஆம்பளைங்களை பார்த்தால் கலகலன்னு பேசறாங்க. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற பாவனை.”
சொன்னவள், வித்யாவின் முகம் சிவப்பதைப் பார்த்து,
“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே. உன்னை சொல்லலை. சாதாரணமாக, எல்லா பெண்களையும் பற்றி பொதுவான அபிப்ராயம் சொன்னேன். வரட்டுமா.
இன்னைக்கு காலையிலேயே, என் மூத்த தாரத்து மகன் விக்ரம் வந்து என் பாதி உசிரை எடுத்துட்டு போயிட்டான். அவனோட கத்தி தொண்டையே வறண்டு போச்சு. போய் சூடா காபி கலந்து குடிக்கணும்”
“என்னம்மா இது, இந்தம்மா மோசமானவாங்களாக இருப்பாங்க போலிருக்கே. குத்தலான பேச்சு, பொறாமை வீசும் பார்வை. ஆளே சரியில்லமா”
“நமக்கென்ன வந்தது. அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டும். வாடகைக்கு இருக்கிறோம். ஒண்ணாந்தேதி பணத்தை கொடுத்துட்டு நம்ப வேலையை பார்ப்போம்”
“இப்படி உங்களுக்குள்ளே பண்டமாற்று அடிக்கடி நடக்கும் போலிருக்கே.”
“நான் எதைக் கேட்டும் அவங்க வாசல்படி ஏறமாட்டேன். அந்த பங்கஜம் வாரம் ஒரு தடவையாவது எதையாவது கேட்டு வந்துடுவாங்க. அரிசி, சீனி, பருப்புன்னு என்ன செய்யறது. கொடுக்க வேண்டியதா இருக்கு.”“திரும்ப வருமா”
“எப்பவாவது மனசு வந்தா கொண்டு வந்து கொடுப்பாங்க. வாடகையோடு இதையும் சேர்த்துக்க வேண்டியதுதான்”
“சரிம்மா, நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வரேன்.”
“ஆமாம் வித்யா. நானே சொல்லணும்னு இருந்தேன். உன் பேரில் போட்ட பணம் அஞ்சு லட்சம், வட்டியெல்லாம் என்ன வருதுன்னு பாரு. அஞ்சு வருஷத்துக்கு போட்டது முடிஞ்சிருக்கும். எல்லாம் கணக்கு பண்ணிட்டு வா... அதை எடுத்து உனக்கு கொஞ்சம் நகை வாங்கலாம்னு பார்க்கிறேன். இன்னும் இரண்டு வருஷத்தில் உன் கல்யாணத்தை முடிக்கணும். உனக்கானவன் எங்கே பிறந்திருக்கானோ. வலைவீசி தேடணும்.”
“ஆரம்பிச்சுட்டியா. நான் கிளம்பறேன்”
“இரு வித்யா. நீ குளிக்கும்போது ஊட்டி ரோஸ் வந்தது. வாங்கி வச்சேன். உனக்கு பிடிக்குமே. எடுத்திட்டு வரேன் வச்சுட்டு போ”
ரத்த சிவப்பில், மலர்ந்தும், மலராமல் கூம்பு வடிவில், பெரிதாக இதழ்களை விரித்திருக்கும், அந்த இரண்டு ரோஜாக்களையும், ஹேர்பின்னையும் எடுத்து வருகிறாள் சௌந்தர்யா.
“காதோரத்தில் வச்சுக்க வித்யா”
“இல்லேம்ம... முடியை தளரவிட்டு கிளிப் பண்ணியிருக்கேன். நடுவில் வச்சாதான் அழகு.” இரண்டையும் சேர்த்து வைத்து ஹேர்பின்னை செருகுகிறாள்.
“அம்மா, நல்லாயிருக்கா”
“நீ கட்டி இருக்கற ரோஸ் கலர் புடவைக்கும், சிவந்த நிற ரோஜாவுக்கும் ரொம்பவே அழகாயிருக்கு. போயிட்டு சீக்கிரம் வந்துடு வித்யா. உனக்கு பிடிச்ச வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்து வைக்கிறேன்.”
Kundenbewertungen
romance, relationship, contemporary fiction, Kudumba Novel, family stories, drama, parimala Rajendran